|
அவைத் தலைவர் அவர்களே, அமைச்சர் பெருமக்களே, மற்றும் உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள் கிறேன். தலைவர் அவர்களே தாங்கள் ஒரு இடதுசாரி சிந்தனை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் (பாசு தேவ ஆச்சாரியா) என்று எனக்குத் தெரியும். எனவே, தாங்கள் எனக்கான வாய்ப்பை நசுக்கிட மாட்டீர்கள் என நம்புகிறேன். எனக்கு குறைந்தது பத்துநிமிடங்களாவது தேவை. மூத்த உறுப்பினர்கள் அவரவர் விரும்பிய அளவிலான நேரத்தை - 30 நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டனர். புதிய உறுப்பினர்களான எங்களுக்கு குறைந்தது 10 நிமிடங்களாவது வேண்டும்.
நான் இந்த அவைக்கு புதுமுகம் என்பதனால் முதலில் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன். தொல். திருமாவளவன் என்னும் நான் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர்.
தலைவர் அவர்களே, நான் இந்த அவையில் தலித்துகள், பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்து கிறேன். பெருமைமிக்க இந்த அவைக்கு என்னை அனுப்பியுள்ள எனது தொகுதி மக்களுக்கும், தி.மு.க. காங்கிரசு மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து இசுலாமிய அமைப்புகள், மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக அமைப்புகள் ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கும் எனது உளப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன். மகத்தான சமூக நீதிப்போராளி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அடித்தட்டு மக்களுக்காக தொண்டாற்றிய இந்த அவையில் நானும் ஒரு உறுப்பினராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.
தலித் மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களை மக்களவை யின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் (திருமதி சோனியா காந்தி) அவர்களை நான் வாழ்த்தவும் பாராட்டவும் விரும்புகிறேன். அத்துடன் இதற்கு ஆதரவளித்த அனைத்து மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிலையில் இக்காலகட்டத்தை எளியோரின் காலம் எனக் கூற விரும்புகிறேன். எளியோரை வலிமைப்படுத்துவதே தேசத்தின் உண்மையான வலிமையாகும். எனவே, இத்தகைய முயற்சிகளை மேற்கொண்ட அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் (திருமதி சோனியா காந்தி) அவர்களை மீண்டும் பாராட்டுகிறேன். தற்போது பெண் குடியரசுத் தலைவரைப் பெற்றிருக்கிறோம். மதச் சிறுபான்மைச் சமூகங்களி லிருந்து குடியரசுத் துணைத் தலைவரையும் பிரதமரையும் பெற்றிருக்கிறோம். ஒரு தலித் சமூகத்திலிருந்து மக்களவைத் தலைவராக பெண்ணையும், பழங்குடியினச் சமூகத்திலிருந்து மக்களவைத் துணைத் தலைவர் ஒருவரையும் நாம் பெற்றிருக்கிறோம். எனவே, இதனை எளியோரின் காலம் என்று கருதுகிறேன்.
தலைவர் அவர்களே! குடியரசுத் தலைவர் அவர்களின் உரையில் பாராட்டுதலுக்குரிய பல திட்டங்கள் உள்ளன. குறிப்பாக, பெண் கல்விக்கான தேசிய இயக்கம், அடையாள அட்டை வழங்கும் திட்டம், குப்பம் இல்லா இந்தியா, தேசிய அளவிலான உணவு உறுதிச் சட்டம், சிறுபான்மையினருக்கான பிரதமரின் 15 அம்சத் திட்டம், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா போன்ற அறிவிப்புகள் பாராட்டுக்குரியவையாகும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்கள் இத்தகையத் திட்டங் களை விளக்கிப் பாராட்டியுள்ளனர். எனவே, நான் அவற்றை மேலும் விவரிக்க விரும்பவில்லை.
ஆனால், குடியரசுத் தலைவரின் உரையில் விடுபட்ட சில முக்கியமான சிக்கல்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை பற்றியும், சேது சமுத்திரத் திட்டம், தனியார் துறைகளில் இசுலாமியர்கள், கிறித்தவர்கள் குறிப்பாக தலித் கிறித்தவர்கள் இடஒதுக்கீடு, பாபர் மசூதி போன்ற பல்வேறு குறைகளுடன் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, மக்களவையில் நிறைவேற்றப்படாமல் உள்ள இசுலாமியர்கள், கிறித்தவர்கள் குறிப்பாக தலித் கிறத்தவர்கள் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு, அரசு பணிகளுக் கான இடஒதுக்கீடு மசோதா மற்றும் தீண்டாமை ஒழிப்பு ஆகியவை பற்றி மேதகு குடியரசுத் தலைவரின் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
ஒவ்வொரு கிராமமும் சாதி கிராமமாகவும் தலித் கிராமமாகவும் இரட்டை குடியிருப்புகளாக இருப்பது ஒரு தேசிய அவமானம் எனக்கூறுவதற்காக வருந்துகிறேன். இங்கே தீண்டாமையை ஒழிக்காமல் சனநாயகத்தை வளர்க்க முடியாது. நமது சனநாயகத்தின் மீது நாம் அனைவரும் மிகுந்த வேட்கைக் கொண்டிருக்கிறோம். ஆனால், சனநாயகம் என்பது என்ன? நம்மைப் பொறுத்தவரையில் சனநாயகம் என்பது மற்றவர் களுடைய உணர்வுகளையும் விருப்பங்களையும் மதிப்பதுடன் மற்றவர்களின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் அனுமதிப்ப தாகும்.
ஆனால், நம்மிடையே இத்தகைய மனநிலை இல்லை. எமது கட்சியின் புகழ்பெற்ற முழக்கம் ஒன்று உண்டு. ‘கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்!’ மனிதநேயம் சனநாயகத்தின் இன்றியமையாத அடிப்படைத் தேவையாகும். சனநாயகம் சகோதரத்துவத்திற்கு வழிவகுக்கும். சகோதரத்துவம் சுதந்திரத்தைக் கொடுக்கும்; சுதந்தரம் சமத்துவத்தை உருவாக்கும்! அனைத்திலும் அனைவருக்கும் சமத்துவம் என்பதே உண்மையான சனநாயகம் ஆகும்.
நிறைவாக நான் சில வேண்டுகோள்களை வைக்க விரும்பு கிறேன். இலங்கை தமிழர் மீதான இனப்படுகொலை பற்றிய வெள்ளை அறிக்கை வேண்டும். இலங்கைத் தமிழர் சிக்கலில் இந்திய அரசின் பங்களிப்பு என்ன? இலங்கை அரசுக்கு இந்திய அரசு என்ன வகையான ஆதரவினைத் தந்தது? என இந்திய அரசு வெள்ளை அறிக்கையாக அளிக்க வேண்டும். அதைப்போலவே, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கென ‘தனி அமைச்சம்’ உருவாக்க வேண்டும். மேலும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான ‘தலித் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு’வின் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். மற்றும் உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி உட்பட அனைவருக்கும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்.
எமது கட்சியும் தோழமைக் கட்சியான திமுகவும், ஈழத் தமிழர்கள் சிக்கல் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளன. இந்தியா, தமிழ்ச் சமூகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, இந்தியா தமிழர்களுக்கு எதிரான தனது போக்கை மாற்றிக் கொண்டு எமது தமிழ்ச் சொந்தங்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- நாடாளுமன்றத்தில் கடந்த 8.6.2009 மாலை 5.45 மணியளவில்
எழுச்சித்தமிழர் ஆற்றிய உரை
தலையங்கமாக...
|